மும்பை: இந்தியா-பாகிஸ்தான் நடுவேயான உலக கோப்பை கிரிக்கெட் லீக்
சுற்று போட்டியைவிட ஆஸ்திரேலியா-இந்தியா நடுவேயான அரையிறுதி போட்டியை
தொலைக்காட்சியில், அதிகம் ரசிகர்கள் பார்த்து ரசித்ததாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர், ஆஸ்திரேலியா-நியூசிலாந்து நாடுகளில்
நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரை இந்திய ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு,
தொலைக்காட்சிகளில் கண்டு ரசித்தனர்.
ஸ்டார் குரூப்
உலக கோப்பை தொடரை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒளிபரப்பும் உரிமையை பெற்றிருந்தது .
6 மொழிகள்
தமிழ், மலையாளம், கன்னடம், வங்கமொழி உட்பட ஆறு இந்திய மொழிகளில் ஸ்டார்
ஸ்போர்ட் கிரிக்கெட்டை நேரடியாக வர்ணனை செய்தது. இதுதவிர வழக்கம்போல,
ஆங்கிலம் மற்றும் இந்தியும் வர்ணனை மொழிகளாக தொடர்ந்தன.
நல்ல வரவேற்பு
ஸ்டார் நிறுவனத்தின் இந்த பன்மொழி வர்ணனை திட்டம், ரசிகர்களிடம் நல்ல
வரவேற்பை பெற்றுள்ளது. 77 விழுக்காடு ரசிகர்கள், பிராந்திய மொழிகளில்
ஒளிபரப்பான சேனல்களில்தான் கிரிக்கெட்டை பார்த்துள்ளதாக ஸ்டார் நிறுவனம்
தெரிவித்துள்ளது.
அரையிறுதியில் சாதனை
வரலாறு காணாத அளவாக, உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதிய
போட்டியை மொத்தம் 635 மில்லியன் ரசிகர்கள் கண்டுகழித்துள்ளனர்.
அடடே..
இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் உலக கோப்பை லீக் போட்டியில் மோதியதை பார்த்த
ரசிகர்கள் எண்ணிக்கையை விட இது மிகவும் அதிகம் என்பதுதான் இதில் சிறப்பு.
ஏனெனில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை 288 மில்லியன் ரசிகர்கள்தான்
ரசித்திருந்தனர். அது அப்போது சாதனையாக இருந்தது. இதுவரை,
இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளே அதிக ரசிகர்களை ஈர்த்துவந்த நிலையில், இந்த
வேறுபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மிக்க மகிழ்ச்சி..
ஸ்டார் டிவி தலைமை செயல் அதிகாரி உதய் ஷங்கர் இதுகுறித்து கூறுகையில்,
"2015 உலக கோப்பை மிகவும் சக்சஸ்ஃபுல்லான ஒன்றாக அமைந்தது. ரசிகர்களின்
ஆர்வம், விளம்பரதாரர்களின் போட்டி என, ஸ்டார் டிவி நல்ல வரவேற்பை பெற்றது"
என்றார். இந்தியா அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று, பலம்மிக்க
ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகமாக
சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Post a Comment